நாம் சிற்றதழில் என் கவிதைகள்
சிங்கப்பூர் நண்பர்களால் வெளிவிடப்பட்டிருக்கிற நாம் (ஏப்ரல் – ஜூன் 2008 ) காலாண்டிதழில் என் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.
1.ஒரு ஊதுவத்தியின் மரணமென
புகை அடங்கிய மதியத்தில்
இலையென எச்சம் உதிர்த்திடும்
மரப்பறவையின் நிழலில் வார்த்தைகள் தெறிக்கின்றன
நீள அகல சட்டங்களுக்குள் பொருந்தாமல்
ஜனத்திரள் மணற்வெளியில் தனித்து அலையும்
ஒற்றைக்காகிதப்பட்டமென படப்படக்கத்
துவங்குகிறது பிரியம்
காத்திருக்கும் கூண்டின் தங்கக்கதவிலும்
வெள்ளிப்பூட்டின் அழகிலும்
பேசவியலா பெருமெளனம் பள்ளத்தாக்கை
நிரப்பும் வெள்ளெமென மூழ்கடிக்கிறது
ஞாபகத்திற்காய் இந்த கவிதையையும்
அந்த முத்தங்களையும் சேமிக்கின்றேன்
தாங்கவியலா வெக்கை உடைய
ஒற்றை சிறகை உதிர்த்து பறந்தோடுகிறது
உயிர்ப்பறவை
2.அந்த குழந்தை என்னைப்பார்த்துதான் சிரித்தது
நன்றாய்த் தெரியும்
என்னை பார்த்து மட்டும்தான் சிரித்தது
முகம் நிரவிய திட்டுத்திட்டான பௌடர் பூச்சும்
கன்னத்தின் ஓரத்திருஷ்டி பொட்டுமாய்
பள்ளிக்கு இழுத்துச்செல்லப்படும்
அதன் அம்மாவின் மிரட்டலை மீறியும்
தனியாய் காற்றில் கைகள் வீசி
எதிரில் இல்லாத உன்னோடு
கண்கள் பார்த்திராத இடம் பொருத்திய கைபேசி உரையாடலால் சிரித்துக் கொண்டே கடந்தது
குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே
இருக்கிறார்கள்
தேவதைகள் எப்போதும் தேவதைகளாகவே
இந்த பிசாசுகள் மட்டும்
நன்றி : நாம் காலாண்டிதழ்